ஜம்மு காஷ்மீர்: ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டு கொலை- பாக். திடீர் தாக்குதலுக்கும் செம்ம பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று எல்லையில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு நமது ராணுவம் அதிரடியான பதிலடி கொடுத்தது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது எல்லையில் ஊடுருவ பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த படியே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்தது.
எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மீதான இத்தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியை தொடருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பயங்கரவாதிகளை எல்லைகளில் தொடர்ந்து ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இது தொடர்பான மோதல்களில் கடந்த சில வாரங்களில் மொத்தம் 10 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இதனிடையே ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தியது. இந்திய நிலைகளை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது. இதனால் எல்லைகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு நமது ராணுவத்தின் தரப்பிலும் கடும் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் ஜம்முவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்த ஆத்திரத்தில் பாகிஸ்தான் எல்லையில் திடீர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்கின்றன பாதுகாப்பு படை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications