பாஸ்வானைத் தேடி அவரது வீட்டுக்குப் போன பாஜக தலைவர்கள்
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிப் போய் 12 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் மீண்டும் கூட்டணிக்குத் திரும்பியுள்ளது ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக் கட்சி. பாஜக தலைவர்கள் குழு பாஸ்வானை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது.
முன்னதாக மோடியை பாஸ்வான் சந்திப்பார் என்று தகவல்கள் கூறியிருந்தன. ஆனால் தற்போது பாஜகவின் 2ம் கட்டத் தலைவர்கள், அவரது வீடு தேடி வந்து சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தக் குழுவில் ரவிச்ங்கர் பிரசாத், ஷானவாஸ் ஹுசேன், ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் பாஸ்வான், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் வன்முனறையைக் காரணம் காட்டித்தான் கூட்டணியை விட்டு விலகினார் பாஸ்வான். ஆனால் தற்போது தேர்தல் நெருங்குகிறதே என்ற ஒரே காரணத்துக்காக அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்குத் திரும்புகிறார்.
ராம் விலாஸ் பாஸாவானின் வருகையால் தலித் வாக்குகளை சற்றுக் கவர முடியும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கருதுகிறது.
பீகார் மாநிலத்தில் 8 இடங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாஸ்வான் கட்சி போட்டியிடும் என்று தெரிகிறது. முதலில் அது 10 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் 8 சீட் தர பாஜக முன்வந்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பாஸ்வான் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்து கருத்துக் கூற மறுத்திருந்தார். வலுவான கூட்டணி அமையும், அதில் எனது கட்சி இருக்கும் என்று மட்டுமே கூறியிருந்தார்.
பாஸ்வான், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்புவதால் அவரது வைரியான லாலு பிரசாத் யாதவுக்கும், காங்கிரஸுக்கும் பாஸ்வான் ஆதரவு பீகார்ப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications