"பே கமிஷன்" போதும்.. வருடா வருடம் சம்பளத்தை உயர்த்துங்கள் - ஊதியக் கமிஷன் தலைவர் ஏ.கே.மாத்தூர்
டெல்லி: ஊதியக் கமிஷன் அமைக்கும் வழக்கத்தை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக வருடா வருடம் ஊதிய உயர்வை மேற்கொண்டு வரலாம் என்று 7வது ஊதியக் கமிஷன் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தெரிவித்துள்ளார்.
10 வருடத்திற்கு ஒருமுறை தற்போது ஊதியக் கமிஷன் அமைக்கப்படுகிறது. அது அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. தற்போது 7வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. இதன் தலைவராக இருந்தவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர்.
இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஊதியக் கமிஷன் அமைக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக வருடா வருடம் ஊதிய உயர்வை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். மாத்தூர் அளித்துள்ள பேட்டியிலிருந்து..

வருடாந்திர ஊதிய உயர்வு
10 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பதை விட வருடா வருடம் ஊதியத்தை உயர்த்தும் நடைமுறையை மத்திய அரசு யோசிக்க வேண்டும். நுகர்வு பொருட்களின் விலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊதிய உயர்வை மேற்கொள்ளலாம்.

தேவையற்ற சுமை
ஊதியக் கமிஷனை அமைத்து, அதை செயல்படுத்தும் நடைமுறை தேவையற்ற நிதிச் சுமையைத்தான் மத்திய அரசுக்கு அளிக்கும். எனவே அதை கைவிட வேண்டும்.

மாநிலங்களுக்கும் கஷ்டம்தான்
மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளுக்கும் கூட இது கடினமானதுதான். எனவே எல்லோருக்கும் பாதிப்பைத் தரும் இந்த நடைமுறையை விட்டு விடலாம்.

தனியார் நிறுவனம் போல
தனியார் நிறுவனங்களில் உள்ளது போல அரசு ஊழியர்களுக்கும் வருடாந்திர ஊதிய உயர்வை அளிக்கலாம். அது சரியாகவும் இருக்கும். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார் மாத்தூர்.












Click it and Unblock the Notifications