சாலையோரத்தில் தெலுங்கானா போலீஸ்காரர் செய்த 'அசிங்கம்'.. வைரலாகும் போட்டோ
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தில் காவலர் ஒருவர் வாகனப்போக்குவரத்து நிறைந்த சாலையோரத்தில் நின்று சிறுநீர் கழிப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாலையோரங்களில் பொதுமக்கள் அசுத்தம் செய்வதை தடுக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், சாலையோர பகுதிகளில் அசுத்தம் செய்யக்கூடாது என போலீசாரும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பரபரப்பாக இருக்கும் சாலையின் ஓரத்தில் போலீஸ் ஒருவர் சிறுநீர் கழிப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் சாலையோரத்தில் நிற்கும் போலீஸ் வாகனத்தில் சைபராபாத் என எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை யாரோ சிலர் புகைபடம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், அரசு போதுமான பொதுக் கழிப்பிடங்களை கட்டிக் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மற்றொரு நெட்டிசனோ, என்னதான் இருந்தாலும், பொது இடத்தில் போலீஸாரே இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.