இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி திடீர் கைது !
மும்பை: மும்பை இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக அவரது தாய் இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ இன்று மாலை கைது செய்தது.
பிரபல டிவி சேனல் அதிபர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது மகள்தான் ஷீனா போரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். ஆனால் அந்தக் கொலையை திறம்பட மறைத்ததோடு மிகப் பெரிய, சினிமாக்களையும் மிஞ்சும் விதமான கதைகளையும் புனைந்து தனது கணவர் பீட்டர் முகர்ஜி உள்பட உலகத்தையே நம்ப வைத்து பெரிய மோசடி செய்தார் இந்திராணி முகர்ஜி என்பது அம்பலமானது.

இதையடுத்து ஷீனா போராவை கொலை செய்ததாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
கார் டிரைவரான ஷியாம் ராயிடம் மும்பை போலீஸார் வேறு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, அவர் ஷீனா போராவை கொலை குறித்த தகவல்களை தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ போலீஸார் மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் இந்திராணி முகர்ஜி, சஞ்சய் கன்னா, ஷியாம் ராய் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றப்பத்திரிக்கையில் 150 பேரின் வாக்குமூலங்களும், 200 ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்திராணி முகர்ஜியின் கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ இன்று மாலை கைது செய்தது. தொடர்ந்து அவரிடம் ஷீனா போரா கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது பல்வேறு சாட்சிகள் பீட்டர் முகர்ஜியின் பெயரை குறிப்பிட்டுள்ளதால், அவர் கைது செய்யப்பட்டதாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications