ஜெ. முதல்வராக தடை கோரிய மனு கர்நாடக ஹைகோர்ட்டில் தள்ளுபடி.. மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம்!
பெங்களூர்: ஜெயலலிதா முதல்வராவதற்கு தடை விதிக்க கேட்டு, கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கை தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்துவிட்டது.
இதையடுத்து அவர் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்ணி என்ற வழக்கறிஞர், கர்நாடக உயர்நீதிமன்ற கோடைக்கால பெஞ்ச் முன்னிலையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதற்கு கோர்ட் தடை விதிக்க கேட்டுக்கொண்டார். ஆனால், இதை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால் கவுடா மற்றும் வீரப்பா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட மனு எனக்கூறி தள்ளுபடி செய்ததுடன், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.