கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம்
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின்போது அடுத்தடுத்து இரு இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டதால் 4 வாக்காளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) எனப்படும் கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்குப்பதிவானது கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. ஒரு சில தவறான மற்றும் சிறிய சம்பவங்களைத் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என மேற்குவங்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் சுமூகமாக நடத்த சுமார் 20,000 பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் 4959 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருவதாகவும் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய செயலாளர் நிலஞ்சன் சாண்டில்யா தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு
அமைதியான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது எனவும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் ஒரு ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்யப் பட்டுள்ளதாகவும், 40.48 லட்சம் வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களித்து வருவதாக கூறினார்.

வாக்குச்சாவடியில் குண்டுவீச்சு
இந்த நிலையில் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாகவும், குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவின் சீல்டா பகுதியில் நடந்து வரும் தேர்தல் வாக்குப்பதிவின் போது பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் மூன்று வாக்காளர்கள் காயமடைந்தனர்,. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு குண்டுவீச்சு சம்பவம்
இதேபோல் கொல்கத்தா வின் டாக்கி ஆண்கள் பள்ளி வாக்குச் சாவடிக்கு வெளியே பெட்ரோல் வெடிகுண்டு வீசி சில மர்ம நபர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்திலும் வாக்காளர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜக குற்றச்சாட்டு
இந்த நிலையில், மாநகராட்சி தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து வன்முரை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், டிஎம்சி தொண்டர்கள் சிலர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிசும் பாஜக வேட்பாளரின் மனைவியை பலாத்காரம் செய்து கொலை செய்வதாக மிரட்டியதாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய புகார் கடிதத்தின் நகலை பாஜக தலைவர் அமித் மாளவியா ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications