பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 அதிரடி உயர்வு !
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.67 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.67 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடர்ச்சியாக 4 முறை பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்தது. பின்னர் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வுப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 63.02க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ54.43க்கும் விற்பனை செய்யப்படும்.