வார இறுதியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு மேலும் ரூ. 1 குறைகிறது
டெல்லி: சர்வேதச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ரூ.1 வரை இந்த வார இறுதியில் குறைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதையடுத்து உள்நாட்டு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகியவை வரும் சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க உள்ளன. அதன்படி வார இறுதியில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1 வரை குறையக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கடைசியாக கடந்த 1ம் தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 2.41ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25ம் குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.9.36 குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை 5 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி லிட்டருக்கு ரூ.3.37 குறைக்கப்பட்டது. அக்டோபருக்கு முன்பாக 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் டீசல் விலை குறைக்கப்பட்டது.
இந்த வார இறுதியில் டீசல் விலை குறைக்கப்பட்டால் கடந்த அக்டோபர் மாதம் டீசல் விலை கட்டுப்பாட்டு முறை அகற்றப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மூன்றாவது விலை குறைப்பு ஆகும். மேலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால் அது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்படும் 7வது விலை குறைப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.