ஏற்றுவது ரூபாயில்.. குறைப்பது பைசாவில்.. பெட்ரோல் டீசல் விலையை குறைத்தன எண்ணெய் நிறுவனங்கள்...
டெல்லி : பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து அறிவித்துள்ளன. விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்திருப்பதாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. டெல்லி நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசலின் விலையில் 71 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த (மே) 16 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.71 ம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.66.93 காசுகளில் இருந்து ரூ.66.62 காசுகளாகவும், டீசல் விலை ரூ.50.93 காசுகளில் இருந்து ரூ.50.22 காசுகளாகவும் குறைக்கப்படுகிறது.
சென்னையில் இனி பெட்ரோல் விலை லிட்டருக்கு வரிகளைப் பொருத்து 28 காசுகள் குறைந்து ரூ.69.84 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 77 பைசா குறைந்து ரூ.53.52 க்கும் விற்பனையாகும்.
கடந்த முறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பின் மாற்றம், சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஆகியவற்றைப் பொறுத்து எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை மறுசீரமைக்கப்படும் என்று ஐ.ஓ.சி. தெரிவித்துள்ளது.