‛‛அங்கிள்’’ என அழைத்த இளைஞர்.. அப்படி சொல்லாதீங்க ‛‛ப்ரதர்’’.. கெஞ்சிய பாஜக அமைச்சர்..ஒரே சிரிப்பு
கோஹிமா: நாகலாந்து பாஜக தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலாங் இளைஞர் ஒருவர் ‛‛அங்கிள்'' என அழைத்த நிலையில், ‛‛ப்ரதர்'' தயவு செய்து ‛‛அங்கிள்'' என அழைக்க வேண்டாம் என அவர் கூறிய சம்பவம் நடந்துள்ளது.
நாகலாந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. நெய்பியூ ரியோ என்பவர் முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் டெம்ஜென் இம்னா ஆலாங் என்பவர் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார்.
டெம்ஜென் இம்னா அலாங் தான் நாகலாந்து மாநில பாஜக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அமைச்சராகவும், பாஜக தலைவராகவும் இருந்தாலும் கூட டெம்ஜென் இம்னா அலாங் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.

அதிக ரசிகர்கள்
இவர் சற்று உடல் பருமனுடன் காணப்படுவார். இவரது கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். இதனை பலமுறை அவர் பொதுமேடைகளில் கூறி வருகிறார். நான் பருமனாக இருந்தாலும், கண்கள் சிறியதாக இருந்தாலும் வேலையில் கவனமாக இருப்பேன். இது தான் இந்த மாநிலத்தின் சிறப்பு என பெருமையாக பேசி வருகிறார். இவர் எதையும் சாதாரணமாக எடுத்து கொண்டு செல்லும் குணம் கொண்டுள்ளதோடு, சமூக வலைதளங்களில் அவர் வேடிக்கையாக பல பதிவுகளை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் இந்தியா முழுவதும் டெம்ஜென் இம்னா அலாங்கிற்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

படத்தை பகிர்ந்த அமைச்சர்
இந்நிலையில் தான் டெம்ஜென் இம்னா அலாங்கிற்கு டீப் ராவல் என்பவர் ஒரு படத்தை சமூக வலைதளத்தில் அனுப்பி இருந்தார். அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் டெம்ஜென் இம்னா அலாங் பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த பதிவுடன் ‛‛நான் இவ்வளவு குண்டாகவா இருக்கிறேன்?. மிகவும் திறமையான கலைஞர் எனக்கு இன்ஸ்டாகிராமில் பரிசளித்தார். அவரது அன்பான செயலுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.

‛‛அங்கிள்’’ என அழைக்காதீங்க
இந்த படத்துக்கு தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வேளையில் சிங்கர் ரஞ்சித் என்ற பெயர் கொண்ட ஒருவர், ‛‛உண்மையாகவே அங்கிள்.. நீங்கள் பார்க்க ரொம்ப க்யூட்டாக இருக்கிறீர்கள். பருமனாக இருக்கும் அனைவரும் கூட இந்த மாதிரியான சப்பி முகத்தை பெற மாட்டார்கள்'' என கருத்து பதிவட்டார். இதனை கவனித்த டெம்ஜென் இம்னா ஆலோங், ‛‛நன்றி சகோதரரரே. ஆனால் நீங்கள் என்னை அங்கிள் என்று மட்டும் அழைக்க வேண்டும்'' என ரீப்ளை செய்தார். இதையடுத்து தற்போது இந்த ட்விட்டர் பதிவு இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிங்கிளாக இருக்கும் அமைச்சர்
முன்னதாக உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது மக்கள் தொகையை கட்டுப்பாடு குறித்து டெம்ஜென் இம்னா அலாங் வேடிக்கையாக பதிவு செய்தார். அதில், ‛‛ உலக மக்கள்தொகை தினமான இன்று மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் பெற்று கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். என்னைப் போன்று அனைவரும் சிங்கிளாக இருந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்யலாம். வாருங்கள் ஒன்றிணைந்து சிங்கில்ஸ் இயக்கத்தை தொடங்குவோம்'' என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு இணையதளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. டெம்ஜென் இம்னா அலாங் இன்னும் திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications