நெஞ்சு வலிக்கிறது.. இருந்தாலும் 2-3 நாட்களில் மக்கள் பணிக்கு திரும்புவேன்.. மம்தா வெளியிட்ட வீடியோ
கொல்கத்தா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மம்தா பானர்ஜி, தொண்டர்கள் அமைதியாக இருக்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று மாலை நந்தி கிராமிலுள்ள பிருளியா பஜார் என்ற பகுதியில் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டிருந்தார். காருக்கு அருகில் நின்று பேசியவரை திடீரென்று அங்கு வந்த ஐந்து பேர், தள்ளி விட்டுள்ளனர்.

மம்தா மீது தாக்குதல்
இதில் மம்தாவில் காலில் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கொல்கத்தா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். கால் மற்றும் கைகளில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

தொண்டர்கள் போராட்டம்
மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட செய்தி அம்மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் இவர்கள்தான் என மம்தா பானர்ஜி யாரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு முதலே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர் சிக்சிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் முன்பும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

அமைதியாக இருங்கள்
இந்நிலையில் தனது தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மம்தா பானர்ஜி, "அனைவரும் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருங்கள். பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது. எனக்கு கை, கால், தசைநார்களில் காயம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். எனக்கு நெஞ்சிலும் வலி ஏற்பட்டுள்ளது" என்றார்

2-3 நாட்களில் திரும்பிவிடுவேன்
தொடர்ந்து எவ்வாறு இந்தச் சம்பவம் ஏற்பட்டது என்பது குறித்துப் பேசிய அவர், "நான் காரில் இருந்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று எனது கார் கதவைச் சிலர் வேகமாக அடித்துச் சாத்தினர். எனக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டேன். இப்போது இங்குதான் சிகிச்சை பெற்று வருகிறேன். இரண்டு, மூன்று நாட்களில் நான் மருத்துவமனையிலிருந்து திரும்பிவிடுவேன்.

சக்கர நாற்காலியில் பிரச்சாரம்
காலில் ஏற்பட்டுள்ள காயம் பிரச்னையாகதான் உள்ளது. ஆனாலும், அதை நான் சமாளித்துவிடுவேன். இதனால் எனது பிரசார கூட்டங்கள் பாதிப்பு அடைவதை அனுமதிக்க மாட்டேன். என்ன, சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் எனக்கு உங்கள் ஆதரவும் உதவியும் தேவைப்படும்" என்று அதில் தெரிவித்துள்ளார். மருத்துவமனையிலிருந்து மம்தா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைராலாக பரவிவருகிறது.












Click it and Unblock the Notifications