பெங்களூர்: ரூ.4000 கோடியில் ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி மையம்.. மோடி தொடங்கி வைக்கிறார்
பெங்களூர்: ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டட் (எச்.ஏ.எல்) பெங்களூர் அருகே புதிய ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவை தொடங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, அதை தொடங்கி வைக்க உள்ளார்.
எச்.ஏ.எல் ஏற்கனவே பெங்களூரில் ஹெலிகாப்டர் உற்பத்தி செய்துவரும் நிலையில், அங்கிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலுள்ள தும்கூரில் புதிதாக ஒரு உற்பத்தி பிரிவை தொடங்க உள்ளது. இதற்காக, கர்நாடக அரசு 610 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த உற்பத்தி பிரிவை ஜனவரி முதல் வாரத்தில், மோடி துவக்கி வைக்க உள்ளார்.
துவக்க தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், ஜனவரி 3ம் தேதி, மைசூரில் நடைபெறும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைக்க மோடி கர்நாடகா வருகிறார். அப்போது, தும்கூர் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எச்.ஏ.எல் சேர்மன் டி.எஸ்.ராஜு 'ஒன்இந்தியா'விடம் பேசுகையில், "ஹெலிகாப்டர் உற்பத்தியை அடுத்த 10 வருடங்களில் மும்மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். புதிய உற்பத்தி பிரிவு எங்கள் இலக்கை எட்ட உதவும். நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கும்.
2019ம் ஆண்டுக்குள்ளாக, தும்கூர் உற்பத்தி பிரிவில் போர் ஹெலிகாப்டர்களை உருவாக்கிவிடுவோம். இந்த உற்பத்தி பிரிவுக்கான முதலீடு ரூ.4000 கோடி" என்றார்.