மனிதாபிமான உதவியை ரகசியமாக செய்த முதல்நபர் சுஷ்மா - மோடிக்கு துணிச்சல் இல்லை: ராகுல் பாய்ச்சல்!!
டெல்லி: உலகத்திலேயே மனிதாபிமான உதவியைக் கூட ரகசியமாக செய்த முதல்நபர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்தான் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
லோக்சபாவில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவியது குறித்து காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பதிலளித்த சுஷ்மா ஸ்வரா, முன்னாள் பிரதமர் ராஜிவ், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் அமைச்சர் சிதம்பரம் என அனைவரையும் வறுத்தெடுத்து விளாசியிருந்தார்.
இதற்கு பதிலடியாக ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியாவில் கருப்புப் பணத்தின் அடையாளமாக குறியீடாக இருப்பவர் லலித் மோடிதான். காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் கேள்வி கேட்கிறதோ அப்போதெல்லாம் எங்களை அமைதியாக உட்காரவைக்க முயற்சிக்கிறார்கள்..
உங்களால் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியை வாய்மூட வைத்துவிட முடியாது. லலித் மோடி விவகாரத்தில் பிரதமரின் நிலை என்ன என்பதை நாடு அறிய விரும்புகிறது.
ஆனால் இந்த நாடாளுமன்றத்துக்கு வந்து அமர்ந்து பிரச்சனையை எதிர்கொள்கிற துணிச்சல் பிரதமர் மோடிக்கு கிடையாது. லலித் மோடியிடம் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்தினர் பணம் பெற்றது உண்மை.
லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் ரகசியமாக ஏன் உதவி செய்ய வேண்டும்? மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன் என்கிறார்... உலகத்திலேயே முதல் முறையாக மனிதாபிமான உதவியை ரகசியகமாக செய்தவர் சுஷ்மா ஸ்வராஜ்தான்..
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.