"நூற்றாண்டு காயங்கள் ஆறுகிறது.." அயோத்தியில் காவிக்கொடியை ஏற்றிய பிறகு.. பிரதமர் மோடி சொன்ன பாயிண்டு
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி 161 அடி பிரம்மாண்ட கோபுரத்தில் காவி கொடியேற்றை ஏற்றி வைத்தார். அப்போது நூற்றாண்டுகளின் காயங்களும் வலியும் இப்போது மெல்லக் குணமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ராமர் நினைத்தபடி பாகுபாடு இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தான் ராமர் பிறந்ததாக இந்துக்களிடையே நம்பிக்கை உள்ளது. அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பல காலமாகவே பாஜக- ஆஎஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதன்படி கொரோனா காலகட்டத்தில் அங்கு ராமர் கோயில் கட்டுமானம் ஆரம்பித்தது.

அயோத்தி கோயில் கட்டுமானம் நிறைவு
2024 ஜனவரி மாதம் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 2024 லோக்சபா தேர்தலில் ராமர் கோயிலையும் வைத்து பாஜக பிரச்சாரம் செய்தது. கும்பாபிஷேகம் நடந்தாலும் கூட அதன் கட்டுமானம் தொடர்ந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது அதன் கட்டுமானம் முடிந்துள்ளது.
இதையடுத்து அங்கு த்வஜ் ஆரோஹன் என்ற நிகழ்வு நடந்தது. கோயிலின் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததையே இது காட்டுகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராமர் கோயிலில் காவிக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நூற்றாண்டுகளின் காயங்களும் வலியும் இன்று குணமடைகின்றன என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேச்சு
500 ஆண்டுக்கால சங்கல்பத்தின் நிறைவாக இந்த தருணம் அமைந்துள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தக் கொடி ராமர் பெருமானின் லட்சியங்களை உள்ளடக்கியதாகவும், சத்தியம் மற்றும் தர்மத்தின் வெற்றியைச் சித்தரிப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நூற்றாண்டு காயம்
ராம பக்தர்களுக்குத் தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், கோயில் கட்டுமானத்திற்குப் பங்களித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "இன்று இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் ராம மயமாக மாறி வருகிறது. ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் சொல்ல முடியாத திருப்தி நிலவுகிறது. நூற்றாண்டு கால காயங்கள் ஆறி வருகின்றன. பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த வேதனைகள் இன்று முடிவுக்கு வருகின்றன. நீண்டகால கனவுகள் நிறைவேறி வருகின்றன. சத்தியத்தின் வெற்றிக்கு அடையாளமாக இந்த புனிதக் கொடி உயர்ந்து நிற்கும்.
இந்தக் கொடி ஒரு வெற்றியையும், போராட்டக் கதையையும் குறிக்கிறது. இது பல நூற்றாண்டுகளின் விடாமுயற்சிக்கு ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. ராமரின் கொள்கைகளான உண்மைதான் தர்மம், பாகுபாடு மற்றும் துன்பம் இல்லாத சமூகம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் வறுமை இல்லாத உலகம் ஆகியவற்றை இது காட்டும்.
பாகுபாடு இல்லை
நமது ராமர் யாருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை.. அதே உணர்வுடன் நாமும் முன்னேறி வருகிறோம்.. நாம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இரண்டையும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இந்த நாடு நமக்கு முன்பே இருந்தது.. நமக்கு பின்னரும் நீண்ட காலம் நீடிக்கும். எனவே மக்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். இதை நாம் ராமரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவரது குணாதிசயங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்" என்றார்.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 10 அடிக்கு 20 அடி அளவில் முக்கோண வடிவக் கொடியில் ஏற்றப்பட்டது. அதில் பிரகாசமான சூரியன், 'ஓம்' சின்னம், மற்றும் கோவிதார மரம் ஆகியவை இடம்பெற்றிருந்தது. கொடி குறித்து விளக்கிய கோயில் அதிகாரிகள், "கொடியில் காவி நிறம் நெருப்பு, தியாகம் மற்றும் உதிக்கும் சூரியனைக் குறிக்கிறது. இவை ஆன்மீக வலிமை மற்றும் அர்ப்பணிப்பின் சின்னங்களாகப் போற்றப்படுகின்றன" என்றனர்.












Click it and Unblock the Notifications