ஆக. 7-ல் பிரதமர் மோடி சென்னை வருகை... சிறப்பான வரவேற்பளிக்க பா.ஜ.க. மும்முரம்!
சென்னை : தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க வரும் 7-ந் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜக தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தேசிய கைத்தறி நாள் விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் வரும் 7-ந் தேதி காலை நடைபெறுகிறது.
மத்திய அரசு நடத்தும் இந்த விழாவில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 3,000 நெசவாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1,000 நெசவாளர்களும் கலந்து கொள்கின்றனர்.சிறந்த நெசவாளர்ளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.
பொதுவாக இந்த விழா டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். முதல் முறையாக இம்முறை சென்னையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்ற வரும் 7-ந் தேதி பிரதமர் நேரந்திர மோடி சென்னை வருகிறார். சென்னைக்கு வருகை தரும் அவருக்கு விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனிடையே பிரதமர் வருகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் பணிகளை 2 நாட்களுக்கு நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்ப்பதற்காக 2014 ஜூன் 29-ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னை வந்த அவரை, முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் விமான நிலையத்தில் சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர் தமிழகத்துக்கு வருகை தரவில்லை.
வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும் மோடி, தமிழகம் வராதது குறித்து எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு சென்னை வரு வதற்கான விமான டிக்கெட்டை எடுத்து அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.