சட்டசபை தேர்தல்: குஜராத்தில் பிரதமர் மோடி பிஸியோ பிஸி.. ரூ860 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்
அகமதாபாத்: சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் இடைவிடாமல் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குஜராத்தில் இன்று ரூ860 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு மட்டும் நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெறும்; டிசம்பர் 10-ல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்தது. குஜராத் மாநில தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.
அதேநேரத்தில் கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பிரதமர் மோடி குஜராத்தில் பயணம் செய்து வருகிறார். பிரதமர் மோடியின் இந்த அனல் பறக்கும் பயணம் முடிவுக்கு வந்த பின்னர்தான், தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலை அறிவிக்கக் கூடிய நிலை இருக்கிறது.

குஜராத்தில் மோடி
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜம்புகோதாவில் ரூ.860 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. மேலும் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: குஜராத்தின் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினருக்கு இது உணர்வுமிக்க நாளாகும். விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த பழங்குடியினத்தைச் சேர்ந்த வீரர்களுக்கும் குரு கோவிந்த்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பழங்குடியினரின் தியாகத்திற்கு பெயர் போன ஜம்புகோதாவில் தாம் பணியாற்றி இருக்கிறேன்.

பழங்குடியினருக்கு கேந்திரிய வித்யாலயா
இந்த பிராந்தியத்தின் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, ஆகியவை தொடர்பான கோடிக்கணக்கான ரூபாய் திட்டங்கள் தொடங்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. புதிய நிர்வாக வளாகம், கேந்திரீய வித்யாலயா போன்றவை பழங்குடியின சிறார்களுக்கு பெருமளவில் உதவும். குஜராத்தில் பள்ளிகளுக்கு தியாகிகளின் பெயர்களை வைக்கும் பாரம்பரியம் நீண்ட காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்னர்..
20 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் ஆட்சி புரியும் வாய்ப்பு கிடைத்தபோது பழங்குடியினர் பகுதிகளில் கல்வி, சத்துணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலை இருந்தது. அதை மாற்றினோம் நாங்கள். இந்த மாற்றம் ஒரு நாளில் வந்துவிடவில்லை. லட்சக்கணக்கான பழங்குடியின குடும்பங்களின் இடையறாத பணியால் இது ஏற்பட்டது. பழங்குடியினர் பகுதிகளில் பத்தாயிரம் புதிய பள்ளிகள், ஏகலைவா பள்ளிகள், ஆசிரமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாஜகவின் சாதனைகள்
பழங்குடியினர்களுக்கு என தனி அமைச்சகத்தை பிஜேபி அரசுதான் உருவாக்கியது பாஜகதான். ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த மூங்கில் வளர்ப்பு மற்றும் விற்பனையை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்ததும் பாஜகதான். கவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியின கவுரவ தினமாக மத்திய பாஜக அரசுதான் அறிவித்தது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications