புத்த பூர்ணிமாவில் பங்கேற்க நாளை மோடி இலங்கை பயணம்.. தமிழர்களிடம் உரையாற்றுகிறார்
இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு தமிழர்கள் வாழும் பகுதியிலும் மோடி உரையாற்றுகிறார்.
டெல்லி: சர்வதேச புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை செல்கிறார். தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு செல்லும் அவர் அங்கு புதிய மருத்துவ மனையையும் திறந்து வைக்கிறார்.
உலகம் முழுவதிலும் உள்ள புத்த மதத்தினர், கெளதம புத்தர் பிறந்தநாளை 'வேசக்' என்ற புனிதநாளாக உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப்பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் 'வேசக்' தினம் கருதப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த தினம் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் புத்த பூர்ணிமாவை ஒட்டி வரும் 12ம் தேதியில் இருந்து 14ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு ஒன்றை, புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.
புத்த மதத்தவர்கள் பரவலாக வாழ்ந்துவரும் நூற்றுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த சுமார் 400 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைப்பதற்காக நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்.
பின்னர், தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் மோடி, இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றும் வகையில் மாபெரும் பொதுகூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டியில் உள்ள ஆலயத்தில் வழிபாடு செய்யும் மோடி, வெள்ளிக்கிழமை இரவு டெல்லி திரும்புகிறார். அவரின் வருகையையொட்டி தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் மத்திய மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications