இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
டெல்லி: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் நேற்று மாலை நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் அலுவலகத்துக்கு சென்று பொறுப்புகளை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஹைதராபாத் இல்லம் சென்றார்.

அங்கு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை முதலில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. அதன் பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கைத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாஜக தலைவர்களை ராஜபக்சே சந்தித்துப் பேசுகிறார். மாலை 5 மணிக்கு அவர் இலங்கை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications