சந்திரபாபு நாயுடு தந்த சிக்னல்.. மேடையில் ரஜினியை தேடிப்போன மோடி! கடைசியில் என்ன செய்தார் தெரியுமா
அமராவதி: ஆந்திரா முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு கொடுத்த சிக்னலை தொடர்ந்து மேடையில் நின்ற நடிகர் ரஜினிகாந்தை தேடிச்சென்று பிரதமர் மோடி செய்த சம்பவம் அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடந்தது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கூட்டணியும் எழுச்சி பெறவில்லை.

மாறாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் + நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா + பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றியது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது.
மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றியை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு 4வது முறையாக ஆந்திரா முதல்வராக இன்று பதவியேற்றார். விஜயவாடாவில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா, நடிகர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக விழா மேடைக்கு பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் அழைத்து வந்தனர். இந்த சமயத்தில் தம்பி பவன் கல்யாணுடன், சிரஞ்சீவியும் இணைந்தார். இதையடுத்து பிரதமர் மோடி ஒருபுறம் சிரஞ்சீவி, இன்னொரு புறம் பவன் கல்யான் நிற்க இருவரின் கைகளை சேர்த்து பிரதமர் மோடி உயர்த்தி காண்பித்தார். அதன்பிறகு மோடி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் பின்னால் நின்ற சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்த் நிற்கும் திசையை நோக்கி கைகாட்டி சிக்னல் கொடுத்தார். இதையடுத்து விறுவிறுவென ரஜினிகாந்தை நோக்கி சென்ற பிரதமர் மோடி அவரிடமும், அவரது மனைவி லதாவிடமும் கைக்குலுக்கினார். அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்த விழாவில் மேடையில் நின்ற ஓ பன்னீர் செல்வத்திடமும் பிரதமர் மோடி கைக்குலுக்கினார். அதுமட்டுமின்றி முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிடம் கைக்குலுக்கிய மோடி, அவரிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications