லோக்சபாவில் பிரதமர் மோடி மெய்யாலுமே தூங்கினாரா? இந்த வீடியோவை பாருங்க...
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி தூங்கியதாக வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் உண்மையில் பிரதமர் மோடி கீழே குனிந்து படித்து பார்ப்பதைத்தான் பிரதமர் மோடி தூங்கிவிட்டார் என பிரசாரம் செய்து வருவதாக பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து லோக்சபாவில் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட நாள், இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பிரதமர் மோடி கீழே குனிந்து பார்த்து படிப்பதும் ராஜ்நாத்சிங் பேச்சை கவனிப்பதுமாக இருந்தார். அவர் கீழே குனிந்து பார்ப்பதை தூக்கத்தில் இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் ஸ்க்ரீன்சாட் எடுத்து பரப்பி வருகின்றனர். பிரதமர் மோடி தூங்குவதாக 8 செகண்டுகள் ஓடும் வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து படிப்பது பின்னர் ராஜ்நாத்சிங் பேச்சை கவனிக்கும் முழு வீடியோ பதிவை பா.ஜ.க.வினர் வெளியிட்டு வருவதால் சமூக வலைதளங்கள் களேபரமாக காட்சியளிக்கின்றன.












Click it and Unblock the Notifications