தனக்கு எதிராக கோஷமிட்ட ஆம் ஆத்மி எம்.பிக்கு 'தண்ணி காட்டிய' மோடி: லோக்சபாவில் சுவாரசியம்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்றதை எதிர்த்து தர்ணா நடத்தி சோர்வடைந்த, ஆம் ஆத்மி எம்.பி., பகவந்த் மன் என்பவருக்கு பிரதமர் மோடி குடிநீர் அளித்த சம்பவம் லோக்சபாவில் சுவாரசியம் ஏற்படுத்தியது.
முறைகேடு புகார் தொடர்பான வழக்குக்காக, கெஜ்ரிவால் அலுவலகத்தில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது. பிரதமர் மோடிதான் இச்சோதனைக்கு காரணம் என குற்றம்சாட்டி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் இன்று லோக்சபாவில் சபாநாயகர் இருக்கையின் எதிரே வந்து தர்ணா நடத்தினர்.

ஆம் ஆத்மி எம்.பியான பகவந்த் மன், மோடி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் நின்றபடிதான் சபாநாயகரை பார்த்து கோஷமெழுப்பிக்கொண்டிருந்தார். அப்போது, சோர்வடைந்த பகவந்த், குடிநீருக்காக அங்குமிங்கும் தேடினார்.
நாடாளுமன்ற ஊழியர்களை நோக்கி எட்டி, எட்டி பார்த்துள்ளார். அப்போது பிரதமர் மோடி தனது மேசையில் இருந்த குடிநீர் கோப்பையை அவருக்கு அளித்து குடியுங்கள் என்று கூறினார்.
அதை மறுக்காத பகவந்த் மன், மோடி கொடுத்த தண்ணீரை வாங்கி தாகம் தணித்துக் கொண்டார். இருவரும் ஒருக்கணம் புன்னகைகளை பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து, தாகம் தணிந்ததும், மீண்டும் மோடிக்கு எதிராக கோஷங்களை தொடர்ந்தார் பகவந்த் மன்.
பிரதமரின் இத்தகைய செய்கையைப் பார்த்த பாஜக எம்பிக்கள் மேசையை தட்டி ஆரவார ஒலி எழுப்பினர்.
பிரதமர் குடிநீர் அளித்த விவகாரத்தை அறிந்திருந்திராத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர்கள் மேசையை தட்டிய பிறகு, சக எம்.பிக்களிடம் விவரம் கேட்டறிந்து புன்னகைத்தார்.












Click it and Unblock the Notifications