மிரட்டிய இம்ரான் கான்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஞாபகம் இருக்கா.. பிரதமர் மோடி அதிரடி பதிலடி
Recommended Video
டெல்லி: நேற்று முன்தினம் இந்தியாவுக்கு எதிராக ஐநா சபையில் அணு ஆயுத போர் மிரட்டல் விடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசிய நிலையில், நேற்று டெல்லி வந்து இறங்கிய பிரதமர் மோடி வந்த உடனே பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைவு கூர்ந்து பேசினார்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஸிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ வீரர்கள் முகாமை குறி வைத்து கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அதிகாலை 5.30மணி அளவில் பயங்கர தாக்குதல் நடத்தினர். தூங்கி கொண்டிருந்த 19 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றனர். உடனே சுதாரித்த நமது ராணுவத்தினர் தீரமுடன் சண்டையிட்டு 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.
இந்த கோர தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக அடுத்த 10 நாளில் அதாவது செப்டம்பர் 28ம் தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் துள்ளிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியது. இதில் சுமார் 70 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் சில நாட்களுக்கு பிறகு வெளியிட்டது.
அணு ஆயுத போர்
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இந்தியா பெரும் தவறு இழைத்து விட்டதாகவும். இரு நாடுகளும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள் என்பதால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
தீவிரவாதிகளுக்கு பென்சன்
இதற்கு அங்கேயே இந்தியாவைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கான, வெளியுறவுத்துறை, முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பதிலடி கொடுத்தார். தீவிரவாதிகளுக்கு பென்சன் கொடுக்கும் தேசம் தான் பாகிஸ்தான் என்றும், ஐநாவால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 130 பேர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்கள் என்றும், போர் மிரட்டல் விடுப்பது பிரதமர் பதவியில் இருப்பவருக்கு அழகல்ல என்றும் கூறினார்.
இந்தியாவில் பதிலடி
இதனிடையே ஜம்மு காஷ்மீர் குறித்தோ பாகிஸ்தான் குறித்தோ அமெரிக்காவில் இருந்து திரும்பும் வரை எதுவும் பேசாமல் இருந்த பிரதமர் மோடி, இந்திய மண்ணில் நேற்று இரவு காலடி எடுத்த வைத்த உடன் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பேசினார். அதுவும் எப்படி இம்ரான் கான் போர் குறித்து தாக்குதல் விடுத்த ஒரு நாள் கழித்து பேசியிருக்கிறார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
என்ன பேசினார் என்பதை இப்போது பார்ப்போம். "இன்று(நேற்று) செப்டம்பர் 28ம் தேதி, சரியாக சொல்வதென்றால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இதேநாளில் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அன்று நாள் முழுவதும் நான் தூங்கவில்லை. ராணுவ வீரர்களின் தொலைப்பேசி அழைப்பு மணி ஒலிக்கும் வரை இரவு முழுவதும் தூங்கமால் விழித்திருந்தேன்.
வீரர்களின் துணிச்சல்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் தான் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் தங்களின் துணிச்சலின் ஒரு அத்தியாயத்தை எழுதினர். வெற்றிகரமான துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) மூலம் இந்தியாவின் வலிமையை உலகறிய செய்தனர். அந்த இரவை நினைவு கூர்ந்து நாம் நாட்டின் உயர்ந்த வீரர்களுக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன்" என்றார்.
மோடி கலங்கரை விளக்கம்
இதனிடையே அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு விமான நிலைத்தில் நேற்று இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணத்துக்கு பின்னர் நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் நான் லட்ச்சக்கணக்கான இந்தியர்களுடன் இணைந்துள்ளேன். மோடியின் அமெரிக்க பயணம் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு புதிய பிரகாசத்தை அளித்துள்ளது. மோடியின் தலைமை நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்" என்றார்.