குடியரசு தினம்... டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி!
டெல்லி: குடியரசு தின விழாவில் மாமேதை டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடு முழுவதும் இன்று 67 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் இப்போது நடைபெற்று வரும் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், 'நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கிய அனைவருக்கும் மரியாதை செய்கிறேன். அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கரின் சாதனைக்கு எனது சல்யூட்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Tributes to all great personalities who framed our Constitution. I salute Dr. Ambedkar for his efforts as Chairman of Drafting Committee.
— Narendra Modi (@narendramodi) January 26, 2016
குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையொட்டி, டெல்லியில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.