வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று பயணம்: ரூ. 3,800 கோடியிலான 44 நலத்திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார்
வாரணாசி: பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு இன்று செல்கிறார். ரூ. 3,880 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைக்கவும் உள்ளார். 100க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள், நூலகங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றை திறந்துவைக்கவுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 11) செல்கிறாா். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் ரூ. 3,880 கோடி மதிப்பிலான 44 நலத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளார். ரோஹனியா, மெந்திகஞ்சில் பொதுக் கூட்ட அரங்கில், பிரதமா் மோடி திட்டங்களைத் தொடங்கிவைத்து, மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் பாஜகவினர் பல்வேறு விதமான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். பிரதமரை வரவேற்று நகரின் முக்கியப் பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாரணாசியில் கிராமப்புற மேம்பாடு சாா்ந்த பல்வேறு பணிகளை மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைக்கவும் உள்ளார்.
130 குடிநீா் திட்டங்கள், 356 நூலகங்கள், புதிய பாலிடெக்னிக் கல்லூரி, அரசுக் கலை கல்லூரி 100 புதிய அங்கன்வாடி மையங்கள், ராம் நகரில் உள்ள காவல்துறை வளாகத்தில் ஒரு விடுதி ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். ரயில்வே மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையம் இணைந்து சாஸ்திரி, சாம்னே படித்துறையில் மேற்கொண்ட மறுசீரமைப்புத் திட்டங்களையும் தொடங்கிவைக்கவுள்ளார்.
மேலும், வாரணாசியில் புதிதாக 15 துணை மின்நிலையங்கள், புதிய மின்பாதை அமைப்பு உள்பட ரூ. 2,250 கோடி மதிப்பிலான 25 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசி விமான நிலையத்தின் சுரங்கப் பாதை திட்டம், 3 புதிய மேம்பாலங்கள், 2 விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள், துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். ஆளில்லா விமானங்கள், சிசிடிவி ஆகியவற்றின் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications