மோர்பியில் மோடி.. நேராக வண்டியை விட்ட பிரதமர்! குஜராத் பாலம் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு
காந்திநகர்: குஜராத் மாநில மார்பியில் பழமையான தொங்குபாலம் அறுந்து விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்றுள்ளார்.
மோர்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் குஜராத் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை பாலத்தில் அதிகளவிலான மக்கள் ஏறியதால் எடை தாங்காமல் அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் மோடி
விபத்து நடைபெற்ற இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். மோடி மோர்பி நகருக்கு வர எதிர்ப்பு தெரிவித்து GO BACK MODI என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார்.

பிரதமர் நிவாரணம்
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அரசு மருத்துவமனை சீரமைக்கப்பட்டதாக இன்று காலை வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருந்தார்.

விசாரணை குழு
குஜராத் மோர்பி ஆற்றில் பாலம் அறுந்து கீழே விழுந்து மூழ்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் சூழலில், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

9 பேர் கைது
குஜராத்தில் அடுத்தமாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விபத்தால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றிருந்த நேரத்தில் நடந்த இந்த விபத்து அக்கட்சியினரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக 9 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றம்
இந்த பாலம் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என அவர் கோரி இருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனுவை நவம்பர் 14 ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்து இருக்கிறது.

பழமையான பாலம்
141 ஆண்டுக்கு முன் வெள்ளையர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த பழமையான கேபிள் பாலத்தில் அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. 1.25 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு ஏராளமான மக்கள் வருகை தந்துகொண்டிருந்தனர். குறிப்பாக தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications