டெல்லி காவல் நிலையத்தில் பிரதமர் திடீர் சோதனை - சுத்தமாக இருக்கிறதா என நேரில் ஆய்வு
டெல்லி: தூய்மையான இந்தியா திட்டத்தை துவக்கி வைப்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு சென்று அங்குள்ள கழிவறைகள் சுத்தமாக வைக்கப் பட்டுள்ளதா என திடீர் சோதனை நடத்தினார்.
டெல்லியில் இன்று ‘தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். இது மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்று. எனவே, வரும் 2019ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்றுவோம் என்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதன்படி, பள்ளிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை மக்கள் தூய்மையாகப் பேணிக் காக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் வால்மீகி பஸ்தியில் பிரதமர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
வால்மீகி காலனி செல்வதற்கு முன்னதாக மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டார் மோடி. காரில் சென்று கொண்டிருந்த மோடி திடீரென காரை நிறுத்தி காவல் நிலையத்திற்கு உள்ளே வந்ததால், அங்கிருந்த காவலர்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.
காவல் நிலையம் எவ்வளவு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது என நேரில் பார்வையிட்ட மோடி சிறிது நேரம் அங்கிருந்த காவலர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பொது இடங்களை எவ்வாறு தூய்மையாக வைத்திருப்பது என்பது குறித்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
நேற்று குஜராத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா திடீர் சோதனை நடத்தி, கழிவறைகளை தூய்மையாக பேணாத ரயில்வே அதிகாரி ஒருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று மோடி காவல் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications