ரயில்வே துறையை தனியார்மயமாக்க மாட்டோம்- மோடி திட்டவட்டம்
வாரணாசி: ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். வாரணாசி ரயில்வே மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற திட்டங்களின் தொடக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் இவ்வாறு மோடி கூறினார். அக்கூட்டத்தில் பிரதமர் கூறியதாவது:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய இந்தியாவின் நான்கு மண்டலங்களிலும் ரயில்வே பல்கலைக்கழகங்களை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு அதிகப்படியாக நிதி ஒதுக்கி பணி மேற்கொள்ள உள்ளது. இதற்காக உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் தேவைப்படும் வசதி வாய்ப்புகளை அள்ளிக்கொண்டு வருவோம்.
ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது. ரயில்வே துறையை அரசு தனியார்மயமாக்காது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை காலம்தான் ஏழைகளின் பணத்தை ரயில்வே பணிகளுக்காக செலவிடுவது? இத்துறையில் கூடுதலாக முதலீடுகள் செய்யப்பட்டு பணக்காரர்களின் பணம் அதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
ரயில்வே என்பது வெறுமனே போக்குவரத்து சாதன செயல்பாட்டு அமைப்பு மட்டும் கிடையாது. அதுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications