பா.ஜ.க.வுக்கு டெல்லி கதிதான் உ.பி., பீகாரிலும் நேரிடும்: சாபமிடுவது பிரதமர் மோடி சகோதரர்!
டெல்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிய பாரதிய ஜனதாவுக்கு டெல்லியில் ஏற்பட்ட தோல்வியைப் போலதான் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலும் ஏற்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சாடியுள்ளார்.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று அகில இந்திய நியாய விலைக்கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடியும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவரான அவர் கூறியதாவது:
மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது.
எங்கள் போராட்டம் இங்கே எடுத்து வரப்பட்டதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம் ஆகும்.
நான் செய்வது எனது சகோதரர் மோடிக்கு எதிரான புரட்சி அல்ல. என்னை பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர்தான். அவரை நான் மதிக்கிறேன். எனினும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.
எங்களுடைய பிரச்சினைகளை பாரதிய ஜனதா கண்டு கொள்ளவில்லை என்றால் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நடந்ததுபோல் தான் உத்தரபிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும். நான் பாரதிய ஜனதாவின் உறுப்பினர்தான். ஆனாலும் தேசிய கட்சிகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறேன்.
இவ்வாறு பிரகலாத் மோடி கூறினார்.