பிரதமர் மோடி பங்கேற்கும் விருந்துகளில் ஒயின், அசைவ உணவுக்கு தடை!
டெல்லி: 'பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகள் தயார் செய்யவோ, பரிமாறவோ கூடாது' என, பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் அலுவலகம் சார்பில், அனைத்து அமைச்சகங்கள், உயர்அலுவலகங்கள், வெளிநாடுகளில்உள்ள இந்திய துாதரக அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு, ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
அசைவ உணவுக்குத் தடை
அதில்,எந்த காரணத்தாலும், பிரதமர் பங்கேற்கும் விருந்துகளில், அசைவ உணவுகளை பரிமாறக் கூடாது. அதேபோல், ஒயின் பரிமாறுவதையும் தவிர்க்க வேண்டும்.
இந்திய தூதரகங்கள்
பிரதமர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, ஏதாவது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது, அங்குள்ள இந்திய துாதரகங்களின் கடமை.
கட்டுப்பாடு நீக்கம்
அதேநேரத்தில், உணவு விஷயத்தில் தனி மனித சுதந்திரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க விரும்பவில்லை. பிரதமர் பங்கேற்காத அரசு விருந்துகளில், அசைவ உணவு பரிமாறுவதற்கு, எந்த கட்டுப்பாடும் இல்லை என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
விமான நிறுவனத்திற்கும்
'ஏர் - இந்தியா' விமான நிறுவனத்துக்கும், பிரதமர் அலுவலகம் சார்பில் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'பிரதமரின் பயணத்தின் போது, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களை சப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.