11 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் ரூ. 523 கோடி சொத்துகள் முடக்கம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடியின் ரூ. 523 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் முறைகேடாக கடன் பெற்ற தொழிலதிபர் நீரவ் மோடியின் பண்ணை வீடு, பென்ட் ஹவஸ் உள்பட 21 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 523 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. ஏற்கனவே நீரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து வைரம், ஆபரணங்கள், பங்குகள், வங்கியில் செய்யப்பட்டிருந்த டெபாசிட்டுகள் மற்றும் விலைஉயர்ந்த கார்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
தொழிலதிபர் நீரவ் மோடியின் மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய விசாரணை ஆணையமானது பண மோசடி சட்டத்தின் கீழ் மோடியின் ரூ. 81.16 கோடி மதிப்புள்ள பென்ட் ஹவுஸ் மற்றும் மும்பையின் ஒர்லி பகுதியில் கடற்கரையை ஒட்டியுள்ள சமுத்ரா மஹால் என்ற ரூ. 15.45 கோடி மதிப்புடைய அடுக்குமாடி வீட்டையும் முடக்கியுள்ளது.

இதே போன்று நீரவ் மோடி மற்றும் அவருடைய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 21 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.523.72 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த 21 சொத்துகளில் 6 குடியிருப்பு வீடுகள், 10 அலுவலக கட்டிடங்கள், புனேவில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு சோலார் பவர் பிளாண்ட், அலிபாகில் பண்ணை வீடு, அஹமத் நகர் மாவட்டத்தில் 132 ஏக்கர் நிலம் உள்ளிட்டவை அடங்கும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. ஏற்கனவே நீரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து வைரம், விலை உயர்ந்த கற்கள், ஆபரணங்கள், பங்குகள், வங்கியில் செய்யப்பட்டிருந்த டெபாசிட்டுகள் மற்றும விலைஉயர்ந்த கார்களையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications