போலீஸ் குதிரையை கொடூரமாக தாக்கி காலை உடைத்த பாஜக எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் அரசுக்கு எதிரான போட்டத்தின்போது, உருட்டுக்கட்டையால் போலீஸ் குதிரையின் காலை தாக்கி உடைத்த பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது.
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை பிரிவு வந்திருந்தது. அப்போது, வெறி வந்தவர் போல காணப்பட்ட கணேஷ் ஜோஷி, உருட்டுக்கட்டையை எடுத்து, போலீஸ்காரர் ஒருவர் அமர்ந்திருந்த குதிரையின் கால்களை கொடூரமாக ஓங்கி, ஓங்கி அடித்தார்.

சரிந்த குதிரை
இந்த தாக்குதலில் குதிரை அப்படியே கீழே விழுந்தது. அதன் கால்களில் முறிவு ஏற்பட்டு, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

அதிர்ச்சி
குதிரையை எம்.எல்.ஏ தாக்கிய சம்பவம் வீடியோக்களாக வெளியாகியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் விலங்குகள் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
இதுகுறித்து, பிராணிகள் வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளில் கணேஷ் ஜோஷி மீது டேராடூன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சக்திமான்
தாக்குதலுக்கு உள்ளான குதிரை பெயர் சக்திமான். 2007ம் ஆண்டில் ரூ.95 ஆயிரம் விலைக்கு காவல்துறையால் வாங்கப்பட்டது. திடகாத்திர தோற்றம் கொண்ட சக்திமான் குதிரை, பல போராட்டக்களங்களை சந்தித்த வரலாறு கொண்டது.
மருத்துவர்கள்
குதிரையை பரிசோதித்த டாக்டர்கள் உடைபட்ட காலை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இனிமேல் அது காவல்துறைக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications