சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் நண்பர் நிறுவனத்தில் கொல்கத்தா போலீஸ் ரெய்டு
கொல்கத்தா: சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் குடும்ப நண்பருக்கு சொந்தமான இடங்களில், கொல்கத்தா போலீசார் ரெய்டு நடத்தினர்.
பிரவீன் அகர்வால் என்பவருக்கு சொந்தமான ஏஞ்சலா மெர்கன்டைல் பிரைவேட் லிமிட்டட், என்ற நிறுவனத்தில் கொல்கத்தா போலீசார் ரெய்டு நடத்தினர். பிரவீன் அகர்வால் என்பவர் நாகேஷ்வரராவ் நீண்டகால குடும்ப நண்பர் என்று கூறப்படுகிறது.
ஏஞ்சலா மெர்கன்டைல் என்பது, வங்கி சேவையற்ற நிதி நிறுவனமாகும். பவ்பஜார் காவல் நிலையத்தில் இந்த நிறுவனத்திற்கு எதிராக பதியப்பட்ட புகார் அடிப்படையில், காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சால்ட் லேக் பகுதியில் குடியிருப்பு பகுதியில் முன்பு ஏஞ்சலா நிறுவனம் செயல்பட்டு வந்தது. அங்கும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. கொல்கத்தா போலீஸ் இணை கமிஷனர், பிரவீன் திரிபாதி இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், இந்த தகவல் உண்மைதான் என்றும், இது பிரவீன் அகர்வால் நிறுவனம்தான் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இதை நாகேஷ்வரராவ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிறுவனம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது கிடையாது என்று கூறியுள்ளார்.
நாகேஷ்வரராவ் மனைவி சந்தியா இந்த நிறுவனத்தில் அதிக, அளவுக்கு வர்த்தகங்களை மேற்கொண்டிருக்கிறார். 2010-11ம் நிதியாண்டு, 2011-12ம் நிதியாண்டு மற்றும் 2013-14ம் நிதியாண்டுகளில், இந்த நிறுவனத்திடமிருந்து சந்தியாய 25லட்சம் பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த முற்பட்ட நிலையில், சிபிஐயின் இடைக்கால இயக்குநராக செயல்பட்ட நாகேஷ்வரராவ் நண்பரின் நிதி நிறுவனத்தில் நடத்தப்பட்டுள்ள ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.