“சௌராஷ்டிராவில் வாய்ப்பில்ல ராஜா".. ஆம் ஆத்மிக்கு போன "ரெட் சிக்னல்".. குஜராத் தேர்தல் கணிப்பு!
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் 'சௌராஷ்டிரா' பகுதியில் ஆம் ஆத்மியின் பிரசாரங்கள் எடுபடவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
கடந்த தேர்தலில் பாஜகவை விட 10% வாக்குகளை குறைவாக பெற்ற காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. அதேபோல, கடந்த 27 ஆண்டுக்கால ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முயன்று வருகிறது.
இதற்கிடையில் பஞ்சாபில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி, சௌராஷ்டிரா பகுதியில் பின்னடைவை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
நவ.26 சட்ட நாளில் பகவத் கீதை, உபநிடதங்கள் நடத்த உத்தரவிடுவதா? மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்
குஜராத்
குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டம் டிசம்பர் 1ம் தேதியும் இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் கட்சி 29 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இதில் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. இதனையடுத்து இந்த முறை தனி கவனம் செலுத்தி வருவதாக கட்சி தலைமை கூறியுள்ளது. ஆனால் என்னதான் தனி கவனம் செலுத்தினாலும் சௌராஷ்டிரா பகுதியில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
சௌராஷ்டிரா
குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதி என்பது 11 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த 11 மாவட்டங்களில் அதிகமான இடங்களில் பாஜக கைதான் ஓங்கி இருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களை காங்கிரஸ் தனது பிடியில் வைத்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்கு வங்கியும் காங்கிரசுக்கு பலமாக இருக்கிறது. இவ்வாறு, காங்கிரஸ் பலமாக உள்ள துவாரகாவின் கம்பாலியா தொகுதியில்தான் ஆம் ஆத்மி தங்களது முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. இத்தேர்தலில் இலவச மின்சாரம், பயிர்களுக்கு கூடுதல் விலை என பல்வேறு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கொடுத்திருக்கிறது. இதனை அப்பகுதி மக்கள் பலர் வரவேற்றுள்ளனர்.
உள்ளூர் பலம்
ஆனால் துவாரகாவில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய தளம் கிடையாது. அதாவது உள்ளூரில் இக்கட்சிக்கு ஊழியர்கள் கிடையாது. இதனால் கட்சியின் பிராசாரத்தை கொண்டு செல்வதில் பெரிய சுனக்கம் ஏற்பட்டிருக்கிறது. சௌராஷ்டிரா பகுதி முழுக்க ஆம் ஆத்மிக்கு இதே நிலைமைதான். டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்துதான் இந்த பகுதியில் பிரசாரத்திற்கு ஆட்களை கட்சி அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் இந்த பகுதியில் ஆம் ஆத்மி பின்னடைவை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதுகுறித்தெல்லாம் கட்சி தலைமை கவலைப்படுவதாக தெரியவில்லை.
முதலமைச்சர் வேட்பாளர்
சமீபத்தில் செய்தியாளருக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி குஜராத் மாநில முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி, "ஆம் ஆத்மி இந்த முறை 30% வாக்குகளை தாண்டும். காங்கிரஸ் 10 இடங்களில் ஜெயிப்பதே கடினம்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி காங்கிரஸை காலி செய்ய முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. அதேபோல மற்றொரு பேட்டியில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி மாடல் குறித்து பலரும் வியந்து பேசுகிறார்கள். டெல்லி போன்றே தங்களது மாநிலமும் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆம் ஆத்மி
ஆனால் அவர்கள் தேர்தல் என்று வரும்போது புதிய கட்சி என்றால் சற்று தயங்குகிறார்கள். புதியது வந்தால்தான் பழையன கழியும். எனவே ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதேபோல மேலும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகையில், "குஜராத்தில் பாஜகவால் நிறைய ஆபத்து இருக்கிறது. இவர்கள் சில விஷயங்களை இலவசம் என்று அறிவிக்கின்றனர். ஆனால் இதன் மூலம் உருவாகும் சுமைகள் எளிய மக்கள் மீது மறைமுக வரியாக சுமத்தப்படுகிறது" என்று கூறியுள்ளனர். எது எப்படியாயினும், குஜராத் தேர்தலை ஒரு 'கை' பார்க்க வேண்டும் எனில் ஆம் ஆத்மி உள்ளூர் அளவில் தலைவர்களை உருவாக்கி அவர் மூலம் பிரசாரம் மேற்கொண்டால்தான் அது சாத்தியமாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். சௌராஷ்டிரா பகுதியில் ஆம் ஆத்மி தடைகளை உடைத்து முன்னேறுமா? அல்லது பின்னடைவை சந்திக்குமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும்.