2019 லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி வெல்லும்: சொல்வது கேஜ்ரிவாலின் 13 வயது மகன்
வாரணாசி: 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெல்லும் என்று அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் 13 வயது மகன் புல்கிட் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் கேஜ்ரிவால் வருகை தந்தார். ரயிலில் அவர் சக பயணிகளுடன் வந்த போதும் பெரும்பாலானோருக்கு அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வர் எனத் தெரியவில்லை.

கேஜ்ரிவால் தமது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாரணாசி வந்தார். இது குறித்து கேஜ்ரிவாலிடம் கேட்கப்பட்ட போது, குழந்தைகளுக்கு லீவ் விட்டுவிட்டார்கள்.. அரசியல் பாடம் படிக்கட்டுமே என அழைத்து வந்தேன் என்றார்.
ரயிலில் அவரை அடையாளம் கண்டு கொண்ட அரசு ஊழியரான டி.பி. தாஸ் தம்மை அறிமுகப்படுத்தி, தாம் ஐஐடி காரக்பூரில் படித்தாக தெரிவித்துக் கொண்டார். இதேபோல் 12 வயது சிறுமி ஒருவர், தாம் பள்ளி செல்லும் வழியெங்கும் சுற்று சூழல் மாசுபட்டிருப்பதாகவும் அதற்காக ஏதேனும் செய்யுங்கள் எனக் கூறினார். அதற்கு பதிலளித்த கேஜ்ரிவால், உங்கள் குடியிருப்பை சேர்ந்தவர்களிடம் துடைப்பம் சின்னத்தில் இம்முறை வாக்களிக்க சொல்லுங்கள் என்றார்.
இதேபோல் ஹமாஜி சிங் என்பவர் கேஜ்ரிவாலிடம் சராமரியாக கேள்விகளைக் கேட்டார். ஏன் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி தம்மால் கேள்வி கேட்கவும் முடிந்ததே என்ற திருப்தி அவருக்கு.
அரவிந்த் கேஜ்ரிவாலுடன் வந்திருந்த அவரது 13வயது மகன் புல்கிட்டோவிடம் எதிர்காலத்தில் நீங்களும் அரசியல்வாதியாக வருவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, என் தந்தை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தற்போதைய நிர்வாக அமைப்பை என் தந்தை நிச்சயம் தூய்மையாக்குவார். 2014-ல் இல்லாது போனாலும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் நாங்கள் வெல்வோம் என்றார்.
அட அடுத்த வாரிசு ரெடி?












Click it and Unblock the Notifications