மஞ்சள் நிறமாக மாறும் தாஜ்மஹால்: மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மாசுபடிந்து மஞ்சள் நிறமாக மாறியுள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சமூக ஆர்வலரான டி.கே. ஜோஷி என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது,
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அமெரிக்கவில் உள்ள ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தாஜ்மஹாலின் நிறம் மாறியிருப்பது தெரிய வந்துள்ளது.

தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்ரா மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை எரித்து வருகிறது. இதனால் உண்டாகும் கரும் புகையும், மாசும் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட தாஜ் மஹாலில் படிந்து வருகிறது. இதன் காரணமாக வெண்மை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்துக்கு தாஜ் மஹால் மாறி உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஸ்வதந்திர குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகம், உத்தர பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications