சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை… திருப்பதியில் பதற்றம்
திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழக தொழிலாளர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அவர்களது உடல்கள் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகிறது. இது போலி என்கவுண்டர் என்றும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் முழக்கமிட்டு வருவதால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் ஷேசாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக்கொண்டிருந்த தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை நேற்று வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்கள் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில், திருவண்ணாமலை மாவட்டம் முருகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, முனுசாமி, அர்ஜுனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், வேட்டகிரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள், முருகன், சசிகுமார், காலசமுத்திரத்தைச் சேர்ந்த பழனி உள்பட ஒன்பது பேரின் அடையாளம் தெரிந்தது. இதேபோன்று வேலூர் மாவட்டம் புதூர் நாடு, வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர், சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் யார் என அடையாளம் காணும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே மருத்துவமனையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களுக்கு திரண்டு வந்துள்ளனர். இது திட்டமிட்ட படுகொலை என்றும் இந்த போலி என்கவுண்டரைப் பற்றி உச்ச நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அப்போது மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுனர்.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இதுபோன்ற போலி என்கவுண்டர்கள் அரங்கேறி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பணக்காரர்களாக உள்ளனர். அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணம் சம்பாதித்த போலீசார், இப்போது அப்பாவி கூலித் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே, சேஷாசலம் வனப்பகுதியில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்தோடிய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை செம்மரம் வெட்டுவதற்கு அனுப்பியது யார் என்பது பற்றி விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சேஷாசலம் வனப்பகுதியில், 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளர்களின் துணிப் பைகளை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்த செல்போன்கள், பேட்டரியில் இயங்கும் ரம்பங்கள், 12 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் முக்கிய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த, 10 நாட்களாக தொழிலாளர்களின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆந்திர போலீசார் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், தொழிலாளர்களை மரம் வெட்டுவதற்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டுள்ள வேலூரை சேர்ந்த, 20 ஏஜன்ட்களிடம் போலீசார் விசாரித்து வருகினறனர். இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications