கர்பா நடனத்தின் போது கொத்தாக பறிபோன 10 உயிர்கள்.. மரணத்திற்கு என்ன காரணம்? நிபுணர்கள் சொன்ன தகவல்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கர்பா நடனத்தின் போது 17-வயது சிறுவன் உள்பட 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகினர். இளம் வயதினர் மத்தியில் இருதய பாதிப்புகள் அதிகரித்து இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
வட மாநிலங்களில் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாளும் இரவுகளில் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் கர்பா. கர்பா நடனத்தை பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள். நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்க்காதேவியை மையமாக வைத்து, ஒன்பது சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும்.

வட மாநிலங்களில் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் முக்கியமாக, குஜராத் மாநிலத்தில் கர்பா நடனம் புகழ் பெற்றது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
17 வயது சிறுவன் பலி: அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், கபத்வாஞ்ச் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதே போன்ற மேலும் 8 பலிகள் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன. கர்பா நடனத்தின் போது இளம் வயதினர் உள்பட 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை அங்கே ஏற்படுத்தியுள்ளது.
10-ல் 3 பேர் இளம் வயதினர்: இதனிடையே, இளம் வயதில் மாரடைப்பு அதிகரித்து வருவதற்கான காரனம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ஏற்கனவே உடலில் மருத்துவ ரீதியாக இருக்கும் பிரச்சினைகளை கவனிக்காமல் இருப்பது, பல மணி நேரம் உணவு எதுவும் அருந்தாமல் இருப்பது, ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றாமல் இருப்பது ஆகியவையே இளம் வயதிலேயே மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குஜராத்தில் உள்ள நாராயண மருத்துவமனையில் கார்டியாலஜிஸ்ட் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ஷீஷன் மன்சுரி கூறுகையில், " இளம் வயது நோயாளிகள் அதிக அளவில் இதய பாதிப்புடன் சிகிச்சைக்கு வருவதை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு முன்பாக இதய நோயாளிகள் 10 பேர் வந்தால் ஒருவர் மட்டுமே இளம் வயதினராக இருந்தார். தற்போது 10-ல் மூன்று பேர் 30- வயதுக்கு உட்பட்ட இளம் வயதினராகத்தான் இருக்கிறார்கள்.
இருதய பிரச்சினைகள்: உடலுக்கு அதிக களைப்பை கொடுக்கும் வகையிலான விளையாட்டுக்கள், நடனங்கள் போன்றவற்றில் ஈடுபடும் போது குறிப்பாக கர்பா போன்ற நிகழ்வுகளின் போது ஏற்கனவே உடலில் இருக்கும் பாதிப்புகளை மேலும் அதிகமாக்கலாம். மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகளை அதிகரிக்கலாம்" என்றார்.
மேலும் இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் தங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது அறியாமலே இருந்து இருக்கலாம். உடலியக்க செயல்பாடுகள் அதிகமாக இருக்கும் கர்பா போன்ற நிகழ்ச்சிகளின் போது இருதய பிரச்சினைகள் அதிகரிக்கலாம்" என்றனர்.












Click it and Unblock the Notifications