பீகாரில் அடுத்த ஆண்டு ஏப்-1 முதல் மது விற்பனைக்கு தடை: முதல்வர் நிதிஷ் அதிரடி அறிவிப்பு!!
பாட்னா: பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரணமதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்திருந்தார். இத்தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.
முதல்வராக நிதிஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் மதுவுக்கு எதிராக பீகாரில் பெண்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருவதும் பாராட்டுக்குரியது என்றார்.
வட இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் மதுவிற்பனைக்கு தடை அமலில் உள்ளது. தென்னிந்தியாவில் கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் நிதி நிலைமையில் தமிழகத்தை விட பலமடங்கு மோசமாக இருக்கும் பீகார் மாநிலம் முன்னுதாரணமாக திகழும் வகையில் அதிரடியாக மதுவிற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.