மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
டெல்லி: பாதுகாப்பு படையினர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் மாவோயிஸ்டுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் 200க்கும் மேற்பட்ட மாவோஸ்டுகள் ஒன்று திரண்டு நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றார்.
இதனிடையே மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும், சத்தீஸ்க்ர் முதல்வர் ராமன்சிங்கும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுசில்குமார் ஷிண்டே, சத்தீஸ்கர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை மேற்கொள்ளும். இந்த தாக்குதலையடுத்து மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.