சோம்நாத் சட்டர்ஜி மறைவு.. நாட்டுக்கு பேரிழப்பு.. குடியரசுத் தலைவர் இரங்கல்
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
டெல்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
89 வயதான சோம்நாத் சட்டர்ஜி 10 முறை லோக்சபா எம்பியாக பதவி வகித்துள்ளார். சோம்நாத் சட்டர்ஜி நாட்டிலேயே அதிகமுறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
சிறுநீரகம் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
தலைவர்கள் இரங்கல்
மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சோம்நாத் சட்டர்ஜி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் சோம்நாத் சட்டர்ஜி மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். லோக்சபா முன்னாள் சபாநாயகர், முன்னாள் நாடாளுமன்றவாதியான சோம்நாத் சட்டர்ஜி நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த நபராக இருந்தார். அவரது மறைவு மேற்குவங்கத்திற்கு மட்டுமின்றி நாட்டுக்கே பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
|
பிரதமர் இரங்கல்
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டியவர். ஏழைகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் குரல் கொடுத்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
|
ராகுல்காந்தி இரங்கல்
10 முறை எம்பியாகவும் லோக்சபாவின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்த சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு செய்தியை கேட்டு துயரமடைகிறேன். அவர் ஒரு கல்வி நிறுவனம். மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் பணி கட்சி எல்லைகளை தாண்டி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பாராட்டப்பட்டது. இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.