கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக நெருக்கடி முற்றுகிறது!
மும்பை: உச்சநீதிமன்ற கருத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் பதவி விலக நெருக்கடி முற்றியுள்ளது.
ஐ.பி.எல். 6வது போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேடுகளில் வீரர்களும் அணி நிர்வாகிகளும் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி முத்கல் கமிட்டி தமது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

இந்த அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது முத்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை. இவை தொடர்பாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டுமெனில் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும். அவர் பதவி விலகவில்லை எனில் உச்சநீதிமன்றமே அதற்கான உத்தரவை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மொகிந்தர் அமர்நாத், பிஷன்சிங் பேடி ஆகியோர், கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் கிரிக்கெட் வாரிய முன்னாள் நிர்வாகியும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவருமான கிஷோர் ருங்தாவும் சீனிவாசன் பதவி விலக வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான சிவ்லால் யாதவும், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை சீனிவாசன் ஏற்க வேண்டும். உச்சநீதிமன்ற கருத்தை எவரும் எதிர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications