ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி! 32,500 கோடி திட்டங்களுக்கும் அடிக்கல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி அங்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் ரூ. 32,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பலத்த்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தனி விமானம் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடி சென்றடைந்தார்.

அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ. 32 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இதேபோல், ஜம்முவின் விஜய்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதேபோல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் எலக்ட்ரிக் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதேபோல், செனப் ரயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டம் ஆகிய திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசு பணிக்கு தேர்வாகியுள்ள 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், ஜம்மு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய முனையமாக 2 ஆயிரம் பயணிகளை ஒரே நேரத்தில் கையாளும் விதமாக அமைக்கப்பட உள்ளது. 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்த புதிய முனையம் கட்டப்படும்.
அதேபோல், டெல்லி முதல் ஜம்மு கத்ராவை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை விரிவாக்க பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு இந்திய - பாக் எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். விழா நடைபெறும் ஜம்முவின் மவுலானா ஆசாத் மைதானம் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications