கலவரம் பாதித்த முசாபர்நகரில் பிரதமர், சோனியா, ராகுல்: மக்கள் கண்ணீர்- கதறல்
முசாபர்நகர்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று காலை 10 மணி அளவில் வந்தனர். அவர்கள் உள்ளூர் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் சேர்ந்து ஷாபூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அவர்களிடம் மக்கள் கண்ணீர் மல்க தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநில அரசுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்றும், நிவாரண உதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.
மேலும் பசிகாலான், தாவ்லி மற்றும் சஞ்சாக் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கும் அவர்கள் சென்றனர். அவர்கள் முசபார்நகர் மாவட்டத்தில் சுமார் 2 மணிநேரம் இருந்தார்கள். முன்னதாக சில நிவாரண முகாம்களுக்கு நேற்று சென்ற உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மக்கள் கருப்புக் கொடி காட்டியதுடன் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
கலவரத்தில் பலியான 47 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அகிலேஷ் அறிவித்தார்.