இரண்டு நாட்களில் 2 முறை சோதனை செய்யப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை
பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணை இரண்டு நாட்களில் இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை ஒடிஷா மாநிலத்தில் உள்ள சந்திபூர் ஏவுதளத்தில் நேற்று காலை நடந்தது. இந்த சோதனையின்போது ஏவுகணை இலக்கை சரியாகத் தாக்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அதே ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.20 மணிக்கு பிரித்வி 2 ஏவுகணை சோதனை மீண்டும் நடத்தப்பட்டது. இந்த சோதனையும் வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 2 நாட்களாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 500 முதல் 1,000 கிலோ வரையிலான எடை கொண்ட அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கிமீ தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கும் சக்தி கொண்டது.
ஏற்கனவே ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பிரித்வி 2 ஏவுகணையில் அவ்வப்போது புதிய மாற்றங்களை செய்து சோதனை செய்யப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.