மீண்டும் புயலை கிளப்புகிறது 'இஸ்ரோ உளவு வழக்கு' சதி

வழக்கு என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி குறித்த ரகசிய ஆவணங்களை சிலர் வெளிநாடுகளுக்கு அளித்ததாக புகார் எழுந்தது. இதில் நம்பி நாராயணன் உள்ளிட்ட 2 விஞ்ஞானிகளுடன் 4 பேர் ஈடுபட்டதாகவும் அவர்களில் 2 பேர் மாலத்தீவைச் சேர்ந்த பெண்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரியைப் பாதுகாப்பதாக எழுந்த புகாரை அடுத்து அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கே.கருணாகரன் பதவி விலக நேர்ந்தது. ஆனால் இந்த வழக்கில் 50 நாட்கள் சிறையில் இருந்த நம்பி நாராயணன், தவறாகக் குற்றம்சாட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தால் 1998-ல் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று விஞ்ஞானி நம்பி நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் உள்ள சதிப் பின்னணி குறித்து உயர்நிலைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அதன்பின்னர், இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையிலேயே அவர்களது இலக்கு இஸ்ரோ அமைப்புதான். இந்தியா சுயமாகவே கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.
கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் மூலம் இந்தியாவுக்கு இப்போது பல கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கும். இந்திய விஞ்ஞானிகளை நம்பிக்கை இழக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களது இலக்கு என்றார் நம்பி நாராயணன்.












Click it and Unblock the Notifications