எதிர்தரப்புக்கு நேரில் வாதாட அனுமதி கொடுக்காததே ஜெ. விடுதலைக்கு காரணம்: ஆச்சாரியா தடாலடி
பெங்களூரு: எதிர்தரப்புக்கு வாதிட அனுமதி தராமலே வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது. இதுதான், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிட்டது என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.
ஜெ. வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு நிருபர்களிடம் பேசினார் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா. அவர் கூறுகையில், "நான் தீர்ப்பை முழுமையாக படித்து முடித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து கூறுகிறேன்.

ஆனால், இந்த வழக்கில், ஜெயலலிதா தரப்பு முழுக்க வாதம் செய்ய ஹைகோர்ட்டில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், கர்நாடக தரப்புக்கோ, ஒரு நாள் அவகாசம் மட்டுமே கிடைத்தது. அதுவும், நேரில் வாதிட அனுமதிக்கப்படவில்லை. எழுத்துப்பூர்வ வாதத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது.
எப்போதுமே, நேரில் ஆஜராகி வாதிடுவதுதான் சிறப்பான வாதமாக இருக்க முடியும். ஏனெனில், நீதிபதி தனது சந்தேங்களை கேட்பார், அதற்கு, எதிர்தரப்பு வக்கீல் விளக்கம் சொல்ல முடியும். இந்த விஷயத்தில், எதிர்தரப்புக்கு நேரில் வாதாட அனுமதி கிடைக்கவில்லை.
ஒருநாள் அவகாசத்தை, எழுத்துப்பூர்வ வாதத்துக்கு அளித்ததற்கு பதிலாக, நேரடி வாதத்திற்கு அளித்திருந்தாலும், அது வழக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
பவானிசிங் வாதாடியது செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், அவருக்கு மாற்றாக யாரும் நேரில் வாதாட முடியவில்லை. இதுதான் ஜெயலலிதா வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக காரணமாகும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications