பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த மிக பெரிய போராட்டம்.. பல இடங்களில் மோசமான வன்முறை
காஷ்மீர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் திடீரென மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதியைக் கடந்த 1947இல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்தது. இந்த பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்காமல் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த பகுதியைத் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனக் குறிப்பிடுவார்கள். இந்த பகுதியில் தான் இப்போது மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான முசாஃபராபாத்தில் தான் இந்த போராட்டம் நடந்துள்ளது. அதிக வரி விதிப்பு, பணவீக்கம் மற்றும் மின்வெட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தை ஒடுக்க அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு வன்முறை ஏற்பட்டது.. சமாஹ்னி, செஹன்சா, ரவலகோட், குய்ராட்டா, தத்தபானி மற்றும் ஹட்டியான் பாலா எதத்யால், மிர்பூர் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல பகுதிகளிலும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (JKJAAC) முசாஃபராபாத்தில் பந்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. அப்போது போராட்டம் நடந்த நிலையில் தான் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். மேலும், பல இடங்களில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுகளும் நடத்தினர்.
கைது: அப்பகுதியில் உள்ள மங்களா அணையில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு வரி விதிக்கக்கூடாது.. கோதுமை மாவுக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும், இரவோடு இரவாக அப்பகுதியில் உள்ள பல உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அடிதடி: முசாபராபாத் நோக்கி நீண்ட மிக பெரிய பேரணியை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதை ஒடுக்கவே போலீசார் களமிறக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது மிக மோசமான தாக்குதலை போலீசார் நடத்தியுள்ளனர். கூடுதல் படைகளை அனுப்பி அங்கு நடக்க இருந்த போராட்டத்தைத் தடுத்து நிறுத்தனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. சில இடங்களில் போலீசார் மீதும் தாக்குதல்கள் நடந்தன.
பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான ஒரு பொருளாதார சிக்கலில் மாட்டி இருக்கிறது. சர்வதேச அமைப்புகள் 3 பில்லியன் டாலர் கொடுத்து உதவி செய்த போதிலும் நிலைமை இன்னும் முழுமையாகச் சீராகவில்லை. அதேநேரம் சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாடுகளால் மின்சாரம் தொடங்கிப் பல கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால் அங்குப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications