பற்றி எரியும் வடகிழக்கு-106 ரயில்கள்-.9 விமான சேவைகள் ரத்து- பள்ளி, கல்லூரிகள் மூடல்- தலைவர்கள் கைது
குவஹாத்தி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இப்போராட்டங்களால் 106 ரயில்சேவைகளை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. 9 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் குடியிரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நள்ளிரவில் ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இருப்பினும் இச்சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பெரும் மோதலாக வெடித்துள்ளன. பாதுகாப்பு படையினருடனான மோதலில் அஸ்ஸாமில் 3 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தீவிரமடையும் துப்பாக்கி சூடு.. அசாமில் 3 பேர் பலி.. 28 பேர் படுகாயம்.. போராட்டத்தில் பரபரப்பு!
இணையசேவை முடக்கம்
அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் மொபைல் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அஸ்ஸாமின் திப்ரூகரில் மட்டும் 5 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
ரயில்கள், விமான சேவைகள் ரத்து
வடகிழக்கு மாநிலங்களுக்கான 106 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளதாக வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 9 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
குவஹாத்தியில் இன்று போராட்டம்
குவஹாத்தில் இன்று தடைகளை மீறி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாணவர் அமைப்பு ஆலோசகரான சமுஜ்ஜால் படாச்சார்யா கூறுகையில், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.
பாஜகவினர் மீது தாக்குதல்
மேலும் அஸ்ஸாமில் பாஜக எம்.பி. எம்.எல்.ஏக்களின் வீடுகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்கி வருகின்றன. மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலியின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
துணை ராணுவம் தாக்குதல்
குவஹாத்தியில் போராட்டக்காரர்களின் செய்திகளை ஒளிபரப்பிய உள்ளூர் தொலைக்காட்சி சேனல் அலுவலகத்துக்குள் நுழைந்து துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தலைவர்கள் அதிரடி கைது
மேகாலயாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அஸ்ஸாமில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.