சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? மனநல மருத்துவர் அட்வைஸ்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் மனநல பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 18 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தற்போது அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபோன்ற சுரங்கங்களில் சிக்கிக்கொள்பவர்களுக்கு சில மனநல சிக்கல் இருக்கும் என்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதாவது தொழிலாளர்களுக்கு மன உளைச்சல், அதிக பதட்டம், தொடர்ச்சியான கவலை, அமைதியின்மை, பீதி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது தவிர பின்னர் வீடு திரும்பினாலும் கூட தூங்குவதில் சிரமம், இரவில் அடிக்கடி எழுந்திருத்தல், பயங்கர கனவுகள் போன்ற சிக்கல்களும் உருவாகலாம். மேலும் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் குறைபாடுகள், முடிவெடுக்கும் திறன், யதார்த்தத்தை நம்பாமல் இருப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இவை அனைத்தும் ஒரு மாதம் கழித்து கூட திடீரென ஏற்படலாம் என மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக மனநல ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் சின்யாலிசூரில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு 41 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறது. அங்கு இவர்களுக்கு மனநல சிகிச்சையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் தொழிலாளர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு டேராடூனில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு அவர்கள் மாற்றப்படவும் வாய்ப்பிருக்கிறது. சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இருந்தவர்கள் கூறுகையில், உள்ளே கொஞ்சம் தாராளமான இடம் இருந்ததால் தொழிலாளர்கள் அச்சமடையவில்லை. அவர்கள் மன தைரியத்துடன் இருக்க யோகா செய்திருக்கிறார்கள். ஒற்றுமைதான் அனைவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளது என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications